Saturday, November 14, 2009

அதே நேரம் அதே இடம்

படத்தின் நாயகி அடிக்கடி, லவ்வை விட எனக்கு லைஃப்தான் முக்கியம் என்கிறார். படம் முடிந்த பிறகு நமக்கும் அப்படி‌த்தான் தோன்றுகிறது. படத்தைவிட அதற்காக கொடுத்த பணமும், நேரமும்தான் முக்கியம். திரும்பி கிடைக்காத விஷயங்களாச்சே.


வெட்டியாக ஊர் சுற்றும் ஜெய்க்கும், விஜயலட்சுமிக்கும் காதல். இந்த‌க் காதல் விவகாரம் தெ‌ரிய வந்ததும் ஜெய்க்கு பொறுப்பு வருவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு அவரை பேக்கப் செய்கிறார் ஜெய்யின் தந்தை நிழல்கள் ரவி. ஒரு வருடம் கழிந்து நாடு திரும்பும் ஜெய்க்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவரது காதலி இப்போது வேறொருவ‌ரின் திருமதி. காரணம்...?

லவ்வை விட லைஃப் முக்கியம் என்று புது தத்துவம் உதிர்க்கிறார் விஜயலட்சுமி. காசுக்காக விஜயலட்சுமி திருமணம் செய்து கொண்ட ராகுல் யார் என்றால், ஜெய்யின் திடீர் நண்பர். தன்னை தொடர்ந்துவரும் ஜெய்யிடமிருந்து தப்பிக்க அழகான ஒரு ஆஃபர் வைக்கிறார் விஜயலட்சுமி. ‘ஒருநாள் மட்டும் உன் மனைவியாக இருக்கிறேன்.’ இந்த ஒன் டே மேட்சின் முடிவு என்ன என்பது கிளைமாக்ஸ்.

படிப்பு சுவாரஸியத்துக்காக பூசி மொழுகி எழுதியதைப் படித்து யாராவது படத்துக்கு பாஸ் மார்க் போட்டால் அது நம் தவறில்லை. ஜெய்க்கு அதிக வேலையில்லை. காதலிக்கும் போதும், பழி வாங்க துடிக்கும் போதும் ஒரேவித பாடிலாங்வே‌ஜ்... ஜெய் கவனம் செலுத்த வேண்டிய ஏ‌ரியா இது. விஜயலட்சுமியை மடியில் போட்டு கதறி அழும்போது ஜனம் சி‌ரிக்கிறது. ஜெய்யை சொல்லி குற்றமில்லை, திரைக்கதை அப்படி.

கரடு முரடான கேரக்ட‌ரிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் விஜயலட்சுமி. இடைவேளைக்குப் பிறகு அவரது காதல் பார்வையே கந்தகப் பார்வையாக மாறுவது ஜோர். திருமணத்துக்குப் பிறகு அவர் வரும் காட்சிகளில் டெர்மினேட்டர் படத்தில் அர்னால்ட் வரும் போது பின்னணியில் ஒலிக்கும் இசையை பயன்படுத்தியிருக்கிறார் பிரேம்‌ஜி அமரன். கற்பனைக்கு அந்தளவு தட்டுப்பாடா?

நிழல்கள் ரவியிடம் இரண்டு மணி நேர கால்ஷீட் வாங்கியிருப்பார்கள் போலிருக்கிறது. ஒரே வரவேற்பறையில் இரண்டு காட்சிகளில் வந்துவிட்டு போகிறார். ராகுலும், ஜெய்யும் தண்ணி அடித்துவிட்டு பாடும் அதுவொரு காலம் பாடல் மட்டும் தேறுகிறது.

நண்பர்களின் அரட்டைக் கச்சே‌ரியிலும் ‌ஜீவனில்லை. லொள்ளு சபா ‌‌ஜீவா அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகிறார். அவரும் இல்லாவிட்டால்... ? கற்பனையே பயங்கரமாக இருக்கிறது.

மெகா சீ‌ரியலையே சுவாரஸியமாக எடுக்கும் இந்த‌க் காலத்தில் இப்படியொரு திரைக்கதை. நான் நடித்த நான்கு படங்களில் மூன்று தேறாது என்றார் ஜெய். தீர்க்கத‌ரிசி... சொல்லியபடியே நடந்திருக்கிறது.

0 comments:

Post a Comment